ECONOMYMEDIA STATEMENTNATIONAL

காதலியைச் சீண்டிய நண்பன் படுகொலை- காதலன் மீது குற்றச்சாட்டு

ஷா ஆலம், செப் 1- காதலிக்கு தொல்லை கொடுத்ததால் சினமடைந்து நண்பனைப் படுகொலை  செய்ததாக அப்பெண்ணின் காதலன் மீது தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் நுருள் பர்ஹானா ஜைனால் அபிடின் முன்னிலையில் தமக்கு எதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக 17 வயதுடைய அந்த இளைஞர் தலையை அசைத்தார்.

கொலைக் குற்றச்சாட்டு உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை. இரசாயன அறிக்கையைப் பெறும் பொருட்டு இந்த வழக்கின் மறு விசாரணையை நீதிமன்றம் வரும்  அக்டோபர் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த து.

இம்மாதம் 20ஆம் தேதி மாலை 6.00 மணிக்கும் இரவு 8.30 மணிக்கும் இடையே பாகான் டத்தோ, கம்போங் சுங்கை பாயோங் பாரோ, செலோகோ, ஜாலான் பாசீர் சாலையோரத்தில் தன் நண்பரான பி.ஹரிஹரன் (வயது 21) என்பவரை படுகொலை செய்ததாக அவ்வாடவர் மீது குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.

குற்றாவளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை, மரண தண்டனை  விதிக்கப்படாத பட்சத்தில் 30 முதல் 40 ஆண்டு வரையிலான சிறை மற்றும் 12 பிரம்படிகள் வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

ஹரிஹரன் உடல் கடந்த மாதம் 23ஆம் தேதி பாகான் டத்தோவிலுள்ள செம்பனைத் தோட்டம் ஒன்றில் அழுகிய நிலையில் பொது மக்களால் கண்டு பிடிக்கப்பட்டது. 

மூன்று தினங்களுக்குப் பின்னர் சந்தேகப்பேர்வழி ஊத்தாங் மெலித்தாங்கில் கைது செய்யப்பட்டார். காதலிக்கு தொல்லை கொடுத்த காரணத்தால் சினமடைந்து தன் நண்பரை அவ்வாடவர் படுகொலை செய்தது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

 


Pengarang :