கோலாலம்பூர், செப் 2– இவ்வாண்டிற்கான தேசிய அளவிலான மலேசிய
தினம் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி சரவா மாநிலத் தலைநகரான
கூச்சிங்கின் ஸ்டேடியம் பெர்பாடுவானில் நடைபெறும்.
அமைச்சரவையின் முடிவுக்கேற்ப இவ்வாண்டு மலேசிய தினக்
கொண்டாட்டத்தை ஏற்று நடத்தும் பொறுப்பு சரவா மாநிலத்திற்கு
வழங்கப்பட்டுள்ளதாக ஊடக மற்றும் விளம்பரச் செயல்குழு கூறியது.
மலேசிய தினத்தை வரிசைப் பிரகாரம் தீபகற்ப மலேசியா, சபா மற்றும்
சரவா மாநிலங்கள் மாறி மாறி நடத்த வேண்டும் என கடந்த 2020ஆம்
ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி நடைபெற்ற அமைச்சவைக் கூட்டத்தில்
முடிவெடுக்கப்பட்டதாக அது தெரிவித்தது.
இந்த மலேசிய தினக் கொண்டாட்டம் பல்வேறு கலைப் படைப்புகளுடன்
செப்டம்பர் 15ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு தொடங்கும். இந்த நிகழ்வில்
சரவா மாநில இடைக்கால யாங்டி பெர்த்துவா டான்ஸ்ரீ அமார் முகமது
அஸ்ஃபியா அவாங் நாசர் கலந்து கொள்வார்.
இந்த நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரின்
துணைவியார் டத்தின்ஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில், சரவா
முதலமைச்சர் டான்ஸ்ரீ டாக்டர் அபாங் ஜொஹாரி துன் ஓபேங், சபா
முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜ்ஜி நோர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து
கொள்வர்.
இந்த 2023ஆம் ஆண்டிற்கான மலேசிய தினக் கொண்டாட்டத்தில்
இவ்வாண்டு தேசிய தினத்திற்குப் பயன்படுத்தப்பட்ட “மலேசியா மடாணி-
நம்பிக்கை நிறைந்த ஒற்றுமை நிலைப்பாடு“ எனும் கருப்பொருள்
பயன்படுத்தப்படும்.