கோல லங்காட், செப் 2- சிலாங்கூர் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் 200,000 மரங்களை நடுவதன் மூலம் வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் 10 கோடி மரங்களை நடும் திட்டத்திற்கு ஆதரவளிக்க மாநிலம் உறுதிபூண்டுள்ளது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.
நாட்டில் பசுமையைப் பேணுவதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் இதன் மூலம் மலேசியாவின் 54 சத வீதப் பகுதி பசுமையாக இருப்பதை உறுதி செய்யும் இலக்கை எட்ட முடியும் என்றும் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த திட்டத்தின் வழி ஒவ்வொரு ஆண்டும் 200,000 மரங்களுக்கு மேல் நடுவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்.
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் (சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்) மற்றும் சிலாங்கூர் ராஜா மூடா (தெங்கு அமீர் ஷா) ஆகியோர் மரம் நடும் இயக்கங்களில் எப்போதும் பங்கேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று அவர் கூறினார்.
இன்று இங்குள்ள கமுடா கோவ் சென்ட்ரல் பார்க்கில் ஃபிட் மலேசியா சிலாங்கூர் 2023 நிகழ்வை தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சுமார் 11,000 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பொழுதுபோக்கு நடை, ஐந்து கிலோமீட்டர் ஓட்டம், டிரெயில் சவாரி, ஏரோபிக்ஸ், கயிறு தாண்டுதல் உட்பட 14 போட்டி வடிவிலான உடற்தகுதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.