சிப்பாங், அக் 22- இங்குள்ள ஜாலான் புத்ரா பிரிமா, புத்ரா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இன்று நடைபெற்ற மாநில அரசின் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயனடைந்தனர்.
நகராண்மைக் கழக உறுப்பினர்களின உதவியுடன் இப்பகுதியில் இந்த மலிவு விற்பனைக்கு தாங்கள் ஏற்பாடு செய்ததாக புத்ரா அடுக்குமாடி குடியிருப்பின் ருக்குன் தெத்தாங்கா தலைவர் முகமது இஸ்மாயில் ஜமால் கூறினார்.
மலிவு விற்பனைக்கான கோட்டாவைப் பெறுவதற்கு நாங்கள் நகராண்மைக் கழக உறுப்பினர்களுடன் அணுக்கமாக செயல்பட்டு வந்தோம். வார இறுதியில் விற்பனைக்கான இடம் இருப்பதாக அவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து அதிகமானோர் பயன்பெறுவதற்கு ஏதுவாக இன்று விற்பனையை நடத்த நாங்கள் ஒப்புக் கொண்டோம் என்றார் அவர்.
இதனிடையே, இந்த மலிவு விற்பனையில் சந்தையை விட குறைந்த விலையில் பொருள்கள் விற்கப்படுவதை கண்டு தாம் வியப்படைந்ததாக இந்த விற்பனையில் முதன் முறையாக பங்கேற்ற பொறியாளரான இப்னு அக்கில் முகமது சுஹாய்மி கூறினார்.
இந்த விற்பனையின் பங்கேற்றதன் மூலம் 30 வெள்ளியை என்னால் சேமிக்க முடிந்தது. மாநில அரசின் மிகச் சிறந்த திட்டமாக இது விளங்குவதோடு இது தொடரப்பட வேண்டும் எனவும் நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே தாமதமாக விற்பனைக்கு சென்று பொருள்கள் கிடைக்காமல் ஏமாற்றமடைந்த அனுபவம் உள்ளதால் இம்முறை முன்கூட்டியே தாம் விற்பனை இடத்திற்கு வந்து விட்டதாக குடும்ப மாதான நோராய்னி முகமது சைட் (வயது 39) கூறினார்.
இங்கு விற்கப்படும் பொருள்கள் தரமாகவும் விலை மலிவாகவும் உள்ளன. அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்த முனைகின்றனர். ஆகவே நான் முன்னதாகவே இங்கு வந்து விட்டேன் என்றார் அவர்.