பூச்சோங் டிச 9, சௌஜானா பூச்சோங், ஸ்ரீ முருகன் வழிபாடு சேவை மையத்தின் 4ம் ஆண்டு தீபாவளி விருந்து உபசரிப்பு இரவு எட்டு மணிக்கு இறை வணக்கத்துடன் தொடங்கியது. இந் நிகழ்வு உள்ளூர் நடன மணிகளின் பரத நாட்டியம், குழந்தைகள் நாட்டியம், உள்ளூர் பாடகர் சின்ன எம்.ஜி. ஆர் பிரபுவின் நேர்த்தியான பாடல்கள் மற்றும் அமிகோ கலைக்குழுவினரின் சிறந்த நிகழ்ச்சி தொகுப்புடன் அருமையாக நடந்தேறிந்து.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்த பாடகர்கள் பானு, சுப்ரா, அமிகோஸ் சுகுவுடன் சிங்க நடனத்தை வழங்கிய உள்ளூர் சிங்க நடன குழுவின் படைப்பும் வருகையாளர்களுக்கு மகிழ்வையும் பரவசத்தையும் அளித்தது என்றால் மிகையாகாது.
தொடர்ந்து சௌஜானா பூச்சோங், ஸ்ரீ முருகன் வழிபாடு சேவை மையத்தின் தலைவர் திரு. சரத்பாபு தனது தலைமை உரையில் தீபாவளியின் சிறப்பை எடுத்துரைத்து, நல்ல கோட்பாடுகள் படி மேம்பட்ட நற் பண்புகளை நாம் கடைபிடிப்பதன் வழி, குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் நல்வழி காட்டலாம் என்றார். வருகைத்தந்த மக்களை வரவேற்று , நிகழ்வு வெற்றி பெற பாடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து உரை நிகழ்த்திய நாதன், ஸ்ரீ முருகன் வழிபாடு சேவை மையத்தை பாராட்டி, மக்கள் நலனுக்காக மாதம் ஆயிரம் வெள்ளிகளுக்கு மேல் செலவு செய்து வாடகைக்கு ஒரு இடத்தை எடுத்து, அங்கு பல்வேறு சமூக, இளைஞர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்கான கற்பித்தல் மற்றும் பயிற்சிகள் நடத்திவரும் இயக்கத்தின் நற்செயலை பாராட்டினார்.
அத்துடன் கோவிட் தொற்று நோய் காலத்தில் சுமார் 10 000 வெள்ளிக்கான உதவியையும், மற்றும் நாட்டில் ஏற்பட்ட பெரு வெள்ளப்பெருக்கு காலத்தில் மற்ற இடங்களில் அவதிப்படும் மக்களுக்கு உதவி வழங்கிய நல்லதொரு இயக்கம் இது. அதன் நல்ல திட்டங்களுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினரின் பிரதிநிதி வருகையை தொடர்ந்து பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் யோ பீ ஹின் வருகையளித்து நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தார். அவர்களை எதிர்கொண்டு வரவேற்க சிங்க நடன குழுவினர் இசை படைப்பு வழங்கி வரவேற்றனர்.
தீபாவளி விருந்தில், சிங்க நடன குழுவினர் இசை படைத்து வரவேற்பு அளித்தைக் கண்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோ பீ ஹின், நாட்டின் பல இனங்களுக்கு இடையிலான இணக்கங்களுக்கும், ஒற்றுமைக்கான அற்புதமான அடையாளமாக இந்நிகழ்வு திகழ்வதாக தனது உரையில் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பாராட்டும் வகையில் பாடகர் பானு சீன மொழி பாடலை பாடி அசத்தினார். அதே வேளையில் உள்ளூர் சிறுவர்கள் நான்கு மொழி பாடல்களுக்கு அபிநயம் பிடித்து ஆடி விருந்திரை கவர்ந்தனர்.
ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினரின் பிரதிநிதி சிலாங்கூர் மாநில அரசு வழங்கும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் குறித்து அதில் பதிந்து கொண்டு மக்கள் பயனடைவது குறித்து விளக்கினார்.அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் சட்டமன்ற உறுப்பினரின் மானியம் பொது அமைப்புகளுக்கு வழங்கப்படும் என்றார்.