காசா, டிச 31 காஸா பகுதியிலுள்ள அகதிகள் முகாம்களில் நெரிசல் மிகுந்த சூழ்நிலையில் தங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நோய் அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (ஓசிஏ) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இப்பகுதியில் சுகாதார சேவைகள் நீண்ட காலமாக அதிக சுமை மிகுந்ததாக உள்ள நிலையில் இஸ்ரேலிய இராணுவத்தால் உத்தரவிடப்பட்ட புதிய வெளியேற்ற அலை அவர்களின் வேலையை இன்னும் கடினமாக்கியுள்ளது.
சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அகதிகள் முகாம்களில் அதிகம் பதிவாகும் நோய்களில் அடங்கும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெள்ளிக்கிழமை எக்ஸ் சமூக ஊடகத்தில் தெரிவித்தார்.
சுமார் 180,000 பேர் சுவாச நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட 136,000 க்கும் அதிகமானச் சிறார்கள் வயிற்றுப்போக்கால் அவதியுறுகின்றனர். விரைவாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இந்நோய்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அவர் சொன்னார்.
இது தவிர, 55,000 க்கும் மேற்பட்ட பேன் மற்றும் சிரங்கு நோய்களும் அங்கு கண்டறியப்படுள்ளன. ஐ.நா. சிறார்கள் நிதியம் காஸா பகுதிக்கு கடந்த 600,000 டோஸ் தடுப்பூசிகளை அனுப்பியது.
அடுத்தாண்டிலும் யுத்தம் தொடரும் பட்சத்தில் குழந்தைகளுக்கு வழக்கமான நோய்த் தடுப்பு மருந்துகளை வழங்குவதே இதன் இலக்காகும். தடுப்பூசிகளில் டிப்தீரியா, டெட்டனஸ், இருமல் ஆகியவையும் அடங்கும்.