ஷா ஆலம், ஜன 6- சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தொடங்கி பத்து நாட்களுக்கு நடைபெறும்.
இக்கூட்டத் தொடரை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார் என்று மாநில சட்டமன்ற சபாநாயகர் லாவ் வேங் சான் கூறினார்.
மேன்மை தங்கிய சுல்தானின் உரைக்குப் பின்னர் வழக்கம் போல் அவையில் விவாதங்கள் நடைபெறும் என்று அவர் சொன்னார்.
சட்டமன்றக் கூட்டம் மற்றும் செயல்குழு நிலையிலான கூட்டங்களுக்கு தவறாமலும் குறித்த நேரத்திலும் கலந்து கொள்ளும் அதேவேளையில் மக்களுக்கு பயனளிக்கக்கூடிய விவகாரங்களை முன்வைக்கும்படி உறுப்பினர்களை குறிப்பாக எதிர்க்கட்சியினரைக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் விவகாரங்களைத் தவிர்க்கும்படி கேட்டுக் கெள்கிறேன். இது சமூகத்தை குறிப்பாக மாநிலத்தைப் பலவீனப்படுத்தும் என அவர் மேலும் சொன்னார்.
கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது அவை நடவடிக்கைகளின் அடைவு நிலை குறித்து கருத்துரைத்த லாவ் வேங் சான், உறுப்பினர்களின் வருகை குறித்து தாம் மனநிறைவு கொள்வதாக க் கூறினார்.
உறுப்பினர்களின் வருகையைப் பொறுத்த வரை சிறப்பான அடைவு நிலையை அவை பதிவு செய்தது. அடுத்தக் கூட்டத் தொடரும் இதோ போல் அமையும் என எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.
மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரின் நிகழ்வுகளை பொது மக்கள் காணும் வகையில் சிலாங்கூர் டிவி மற்றும் யூடியூப் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.