ஷா ஆலம், பிப் 12- கிள்ளான் அரச மாநகர் கொண்டாட்ட பெருவிழா வரும் பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்கி மூன்று தினங்களுக்கு பண்டமாரான் விளையாட்டுத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
கிள்ளான் அரச மாநகராக பிரகடனப்படுத்தப்பட்டதை முன்னிட்டு முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழா காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை நடைபெறும் என்று மாநகர் மன்றம் அறிவித்துள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலாங்கூர் எஃப்.சி. கால்பந்துக் குழுவினர் மற்றும் சிறப்புக் கலைஞர்களின் வருகையும் இதில் அடங்கும் என அது தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
இந்த விழாவில் கலந்து கொள்வோர் மூன்று மோட்டார் சைக்கிள்களை வெல்வதற்குரிய வாய்ப்பும் உள்ளது. வரும் பிப்ரவரி 16,17 மற்றும் 18ஆம் தேதிகளில் நடைபெறும் இந்த விழாவில் திரளாகக் கலந்து கொள்ளுங்கள் என மாநகர் மன்றம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டது.