செய்தி. சு.சுப்பையா
கிள்ளான்.மார்ச்.10- உலக மக்கள் தினக் கொண்டாட்டத்தையொட்டி செந்தோசா சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு ஊசி முகாமைத் தமது தொகுதியில் நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் 13 வயது முதல் 20 வயதிற்கு இடையிலான மகளிர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் 300 மகளிர்கள் பயன் பெற்றனர்.
கிள்ளான் அண்டாலாசில் உள்ள சோக்க காக்காய் அமைப்பு வளாகத்தில் நடை பெற்ற இந்நிகழ்வு காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடை பெற்றது. தேசிய புற்று நோய் கழகத்தின் உதவியோடு இந்தத் தடுப்பூசி முகாம் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த காலங்களில் அரசு பள்ளிகளில் இந்தக் கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பு ஊசி முகாம் நடந்து வந்தது. கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில் இச்சேவை நிறுத்தப்பட்டது.
கோவிட் 19 பெருந்தொற்று க்குப் பிறகு தேசிய புற்றுநோய் கழகம் நடமாடும் சேவை யின் உதவியோடு நாடெங்கும் சென்று இந்தப் புற்று நோய் தடுப்பு முகாமை நடத்தி வருகிறது.
இந்தத் தடுப்பூசி போடுவது அவசியம். இதன் வழி பெண்கள் வயதான காலத்தில் கர்ப்பப்பை வாய் புற்று நோயைத் தவிர்க்க முடியும்.
இந்த நோய் குறித்து தமிழ் பெண்களிடம் விழிப்புணர்வு மிகவும் குறைந்து காணப்படுகிறது. இந்த முகாமிற்கு வந்து தடுப்பூசி பெற்றவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள். கலந்து கொண்ட 300 பேரில் 20 க்கு சற்றுக் கூடுதலான தமிழர்களே வந்திருந்தனர். இந்த நோய் குறித்து தமிழ்ப் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் அவர்களின் சிறப்பு அதிகாரியான டாக்டர் உமாராணி கேட்டுக் கொண்டார்.