கோலா லங்காட், மார்ச் 11 – நாட்டில் உள்ள அதிக மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை மாணவர்களின் வசதிகாகவும், மிகவும் உகந்த கற்றல் சூழலை உறுதி செய்யவும் மறு சீரமைக்கப்படும் என கல்வி அமைச்சகம் தெரிவித்தது.
இதுபோன்ற பள்ளிகளின் மறுசீரமைப்பு செயல்முறை மாவட்ட கல்வி அலுவலகங்கள் (PPD) மற்றும் மாநில கல்வித் துறைகள் (JPN) மூலம் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ஃபத்லினா சீடெக் கூறினார்.
பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து (2024/2025 கல்வி அமர்வுக்கு) கூட்ட நெரிசலைத் தவிர்க்க மறுசீரமைப்பு அவசியம் என்றார்.
“உதாரணமாக, இந்த ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கை மிக அதிகமாக உள்ளது. இது மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்வதில் நாம் காட்டும் அக்கறையை காட்டுகிறது” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
தற்போதைய நிலையில், ஆசிரியர்களின் எண்ணிக்கை போதுமானதாக உள்ளது. ஏதேனும் பற்றாக்குறை ஏற்பட்டால், தேவைக்கேற்ப உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என 2024/2025 கல்வி அமர்விற்கான ஆசிரியர் திறன் குறித்து, ஃபத்லினா இவ்வாறு கூறினார்
நாடு முழுவதும் பாலர் பள்ளி பருவம் முதல் படிவம் ஐந்து வரை மொத்தம் ஐந்து மில்லியன் மாணவர்கள் இவ்வாண்டு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர. அதில் சிலாங்கூர் 927,528 மாணவர்களின் எண்ணிக்கை விகிதத்தில் முதலிடத்தில் உள்ளது என அறிக்கை ஒன்றில் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், 466,799 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ளனர், அதே நேரத்தில் 478,594 மாணவர்கள் படிவம் ஒன்றில் சேர்ந்துள்ளனர்.
“இந்த கல்வி அமர்வில் லாபுவான் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர் பதிவுகளைக் கொண்டுள்ளது, அதாவது 1,700 பேர் மட்டுமே முதலாம் ஆண்டிலும், 1,600 பேர் படிவம் ஒன்றிலும் சேர்ந்துள்ளனர்” என்று அந்த அறிக்கை கூறியது.
– பெர்னாமா