ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இன்றும் நாளையும் ஆறு இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

ஷா ஆலம், மார்ச் 16- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்றும் நாளையும் மேலும் ஆறு தொகுதிகளில் நடைபெறவுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருள்களை மலிவான விலையில் விற்பனை  செய்யும் இந்த நிகழ்வு இன்று சனிக்கிழமை சூராவ் ஹாஜி மன்சோர் (சுங்கை பூரோங் தொகுதி), செர்டாங் பாரு 2, சீனப்பள்ளி வளாகம் (ஸ்ரீ செர்டாங் தொகுதி), ஜாலான் 11, செலாயாங் பாரு, (தாமான் டெம்ப்ளர் தொகுதி) ஆகிய இடங்களில் நடைபெறும்.

நாளை ஞாயிற்றுக்கிழமை தாமான் ஸ்ரீ பாயு, (லெம்பா ஜெயா), அப்பார்ட்மெண்ட் செம்பாக்கா 17 (பண்டார் பாரு கிள்ளான்) மற்றும் கெர்லிங் சமூக மண்டபம் ( கோல குபு பாரு) ஆகிய தொகுதிகளில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும், ஒரு தட்டு ‘பி‘ கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும், 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும், 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

வார இறுதி நாட்களில் செகி ப்ரெஷ் பேராங்காடிகளில் நடைபெறும் மலிவு விற்பனையுடன் சேர்த்து இவ்வாண்டில் மாநிலம் முழுவதும் 1,800க்கும் மேற்பட்ட இடங்களில் ஏஹ்சான் ரஹ்மா விற்பனையை நடத்த சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் மூவாயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனைகளின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

கடந்தாண்டு நோன்புப் பெருநாளின் போது கோழி மற்றும் முட்டையை மலிவு விலையில் மிக அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்ததற்காக பி.கே.பி.எஸ். மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.

ஏஹ்சான்  ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது http://linktr.ee/myPKPS  என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும்  அறிந்து கொள்ளலாம்.

 

 


Pengarang :