ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தீ விபத்தில் பெற்றோர் மரணம், மகள் மீட்பு- டாமன்சாரா உத்தாமாவில் சம்பவம்

கோலாலம்பூர், மார்ச் 16 – ஜாலான் எஸ் எஸ் 21/18, டாமன்சாரா உத்தாமாவில் உள்ள இரண்டு மாடி வீட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 14 வயது சிறுமி மீட்கப்பட்ட வேளையில் அவரின் பெற்றோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் காங் சி யாம் (வயது 61) மற்றும் அவரது மனைவி லியோங் சென் முன் (வயது 55) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில  தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.

இந்த தீவிபத்து தொடர்பில் இன்று அதிகாலை 5.13 மணியளவில்  அவசர அழைப்பு வந்தததைத் தொடர்ந்துடாமன்சாரா மற்றும் பெட்டாலிங்  ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து பத்து தீயணைப்பு வீரர்களுடன் நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் சொன்னார்.

அவ்வீட்டின் 70 சதவிகிதம் பகுதி  அழிந்து விட்டதாக மதிப்பிடப்படுகிறது. மேலும் குடியிருப்பின் மேல் தளத்தில் உள்ள பிரதான படுக்கையறை மற்றும் கீழ்த் தளத்தில் உள்ள சமையலறை ஆகிய பகுதிகள் தீ விபத்தில் அதிகம் பாதிக்கப் பட்டன என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தீயணைப்பு விசாரணை அதிகாரிகள் காலை 6.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் விசாரணைக்கு உதவ கே9 மோப்ப நாய்களின் உதவி கோரப்பட்டது என்றார் அவர்.

இந்த தீவிபத்தில் இறந்த  இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டன. மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறை  விசாரணை நடத்தி வருகிறது  என்று முக்லிஸ் கூறினார்.


Pengarang :