கோலாலம்பூர், மார்ச் 16 – புத்ரா ஜெயாவில் 10,000க்கும் மேற்பட்ட ரெசிடென்சி மடாணி மற்றும் ரெஸிடென்சி விலாயா வகை வீடுகள் இவ்வாண்டு முதல் உருவாக்கப்படும். இவ்வீடுகளின் கட்டுமானம் வரும் 2027 இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு ரெஸிடென்சி வகை வீடுகளின் உருவாக்கம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் தரப்பினர் 300,000 வெள்ளிக்கும் குறைவான விலையில் மலிவு விலையில் வீடுகளை சொந்தமாக்கிக் கொள்வதற்குரிய வாய்ப்பை வழங்கும் என்று பிரதமர் துறை அமைச்சர் (கூட்டரசுப் பிரதேசம்) டாக்டர் ஜாலிஹா முஸ்தாபா கூறினார்.
‘உசாஹா ஜெயா இன்சான்’ (பூஜி) கிளஸ்டரின் கீழ் லிண்டோங்@ பூஜி முன்னெடுப்பின் வாயிலாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும் என்று அவர் சொன்னார்.
புத்ராஜெயாவில் இந்த திட்டம் 10,000 வீடுகளை இலக்காகக் கொண்டு பல வளாகங்களில் உருவாக்கப்படும். வரும் 2024 ஆம் ஆண்டு கட்டுமானம் தொடங்கப்பட்டு 2027 ஆம் ஆண்டு முற்றுப்பெறும் என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் அவர் கூறினார்.
புத்ராஜெயாவில் ரெஸிடென்சி மடாணி மற்றும் ரெஸிடென்சி விலாயா வீட்டுத் திட்டங்களைத் தொடங்குவதற்கான சிக்கல்கள் மற்றும் மேம்பாட்டாளர்கள் ஆற்றல் தொடர்பில் விவாதத்தை நடத்திய பின்னர் டாக்டர் ஜாலிஹா இவ்வாறு தெரிவித்தார்.
பூஜி என்பது கூட்டரசு பிரதேசப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் முன்னெடுப்புகளில் ஒன்றாகும். மேலும் இது கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயா ஆகிய கூட்டரசுப் பிரதேசங்களில் உள்ள சமூக-பொருளாதார பிரச்சினைகளைக் கையாள்வதற்கான அணுகுமுறையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.