கோலாலம்பூர் மார்ச் 21- கடந்த ஜனவரி 2011 முதல் 2018 ஜூலை வரையிலான காலக்கட்டத்திற்கான 291 ஊழியர்களின் சந்தா நிலுவைத் தொகையை சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்திற்கு செலுத்தும்படி ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் யின்சன் டிரான்ஸ்போர்ட் (எம்) சென்.பெர்ஹாட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்ட 291 லாரி ஓட்டுநர்களுக்கான வெ.705,150.10 சத்தா தொகையை அந்நிறுவனம் சொக்சோவுக்கு அனுப்பத் தவறியதை சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பு நிரூபித்துள்ளதாக அந்த சமூக பாதுகாப்பு அமைப்பு
அறிக்கை ஒன்றில் கூறியது.
வரும் 2024 மே மாதம் முதல் ஆறு தவணைகளில் முழு நிலுவைத் தொகையையும் செலுத்துமாறு முதலாளிக்கு அறிவுறுத்தப்பட்டது.
1969 ஆம் ஆண்டு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் (சட்டம் 4) கீழ் அனைத்து ஊழியர்களும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் பங்கு பெறுவதை உறுதிசெய்ய முதலாளிகள் கடமைப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை விளக்கியது.
முதலாளிகள் பங்களிப்புகளைச் செய்யத் தவறினால் 1969ஆம் ஆண்டு ஊழியர் சமூகப் பாதுகாப்புச் சட்டம் இன் பிரிவு 6(1) மற்றும் 8ன் கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படலாம். அத்துடன் ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பு (திருத்தம்) விதிமுறைகள் 1971 இன் 32வது விதியின்படியும் அவர்கள் குற்றச்சாட்டை எதிர் கொள்ள நேரிடும் என்று அறிக்கை மேலும் விரிவாகக் கூறுகிறது.