NATIONAL

தாய்லாந்து காதலியைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட  நபரை மனநல சோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவு

ஷா ஆலம், ஏப்19 – செத்தியா ஆலமிலுள்ள ஆடம்பர அடுக்குமாடி  குடியிருப்பின்
23 வது மாடியிலிருந்து தனது தாய்லாந்து காதலியைக் கீழே தள்ளிக்  கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட லாரி ஓட்டுநரை பேராக், உலு கிந்தா, தஞ்சோங் ரம்புத்தான்  மருத்துவமனையில் மனநலப் பரிசோதனை செய்ய மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. .

குற்றம் சாட்டப்பட்ட 37 வயதான வி.நாதன்  மனநிலை சரியில்லாதவர் என நம்பப்படுவதால் அவரை  மனநல மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற பிரதிவாதியின் வழக்கறிஞர் ஆர்.சிவாநந்தனின் விண்ணப்பத்தை  மாஜிஸ்திரேட் முகமது ரெட்ஸா அசார் ரசாலி ஏற்றுக் கொண்டு இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

குற்றம் சாட்டப்பட்டவரின் மனநலம் தொடர்பான அறிக்கையைப் பெற ஜூன் 7 ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது

முன்னதாக, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 342வது பிரிவின் கீழ் இந்த  விண்ணப்பத்தை தாக்கல்  செய்த  வழக்கறிஞர் சிவஞானந்தன், தனது கடசிக்காரர் தொடர்ந்து மெளனம் சாதிப்பதால் வழக்கு தொடர்பான ஆலோசனையை அவரிடமிருந்து பெறுவது மிகவும்  கடினமாக உள்ளது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எனது கட்சிக்காரர் கடந்த  2018ஆம் ஆண்டு  ஒரு  வாகன விபத்தில் சிக்கினார். அதன் விளைவாக  அவர் தலையில் லேசான காயம் ஏற்பட்டு  உள்விழி இரத்தக் கசிவு மற்றும் நிமோக்ரேனியம் ஏற்பட்டது.

சிறையில் அவர் தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்வாரோ  என்று நான் கவலைப்படுகிறேன். எனவே, இந்த  நீதிமன்றம் அவரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று வழக்கறிஞர் தனது வாதத்தில் கூறினார்.

கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை  வழங்கிய குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்பான மருத்துவ குறிப்பையும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

எதிர்தரப்பின் இந்த கோரிக்கைக்கு துணை அரசு வழக்கறிஞர்  நூருல் ஃபரா சோபியா நோரஸ்மான் ஆட்சேபம் தெரிவிக்காததால்  குற்றம் சாட்டப்பட்டவரை  ஒரு மாதத்திற்கு மனநல பரிசோதனைக்கு உட்படுத்த மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி  இரவு 10.02 மணியளவில் ஜாலான் செத்தியா டாகாங்,  செத்தியா ஆலமில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில்   32 வயதான மாவிகா லும்யாய் என்றப் பெண்ணைக் கொன்றதாக நாதன் மீது குற்றம் சாட்டப்பட்டது.


Pengarang :