ஈப்போ, ஏப் 21 – வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் (பிளஸ்) 242.3வது கிலோ மீட்டரில் வடக்கு நோக்கிச் செல்லும் தடத்தில் விரைவுப் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்ததால் அதிலிருந்த 16 பயணிகளும் பதட்டமான தருணங்களை எதிர்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் பின்னிரவு 12.01 மணியளவில் தகவல் கிடைத்ததை தொடர்ந்து கோல கங்சார் மற்றும் மேரு ராயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து தீயணைப்புக் குழுவினர் தீயணைப்பு வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை கமாண்டர் II முகமது ஃபவாஸ் அப்துல் ஜமீல் கூறினார்.
இந்த விபத்தில் அந்த விரைவுப் பேருந்து 80 சதவீதம் எரிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த போது ஓட்டுநர் உட்பட 16 பேர் அந்த பேருந்தில் இருந்தனர். அவர்கள் அனைவரும் பேருந்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறினர் என்றார் அவர்
தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்த போது பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றொரு பேருந்துக்கு மாற்றப்பட்டனர் என்று அவர் இன்று அவர் தீயணைப்புத் துறையின் முகநூலில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.