ஷா ஆலம், ஏப் 21- ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கிடையிலான உறவு மிகவும் வலுவாக உள்ளது. அதில் விரிசல் ஏற்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக கூறினார்.
அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களும் புரிந்துணர்வை வளர்ப்பதில் சிக்கலை எதிர்கொள்ளவில்லை. ஆயினும், தலைமைத்துவத்தின் குரலைப் பிரதிநிதிக்காத சில வெளி பிரச்சனைகள் உள்ளன என்று கெஅடிலான் கட்சியின் தலைவருமான அவர் தெரிவித்தார்.
அமைச்சரவையில் நாங்கள் அந்த பிரச்சனையை (புரிந்துணர்வு) எதிர்கொள்ளவில்லை. ஆனால் வெளியே, தலைமையின் குரலை பிரதிபலிக்காத குரல்கள் உள்ளன. அமைச்சரவைக்கு வெளியே சில விஷயங்கள் பகிரங்கப் படுத்தப்படுவதை நான் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதுவரை பக்கத்தான் ஹரப்பான், தேசிய முன்னணி (பாரிசான் நேஷனல்), சபா மற்றும் சரவாக் கட்சிகளுக்கிடையே சிறிய விரிசல் கூட ஏற்படுவதற்கான அறிகுறியே இல்லை. அவநம்பிக்கை-யானவர்கள் மட்டுமே உள்ளனர்.
இன்று இங்குள்ள ஐடியல் மாநாட்டு மையத்தில் கெஅடிலான் கட்சியின் 25வது நிறைவு விழாவுக்கு தலைமையேற்று 5,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் முன்னிலையில் முக்கிய உரை நிகழ்த்திய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நல்லாட்சிக்கான கொள்கைகளை மீறினால், குறிப்பாக நாட்டின் வளங்களை கொள்ளை அடிக்கும் விவகாரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் புரிந்து கொண்டு ஒப்புக் கொள்கிறார்கள் என்று அன்வார் மேலும் சொன்னார்.
இந்த கொள்கையின் விளைவாக மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது. மாறாக, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்களை அது மட்டுமே பாதிக்கிறது என்றார் அவர்.