ஷா ஆலாம், ஜன.13-
ஒவ்வொரு பிரச்னைக்கும் உடனடி தீர்வு காண்பதையே மக்கள் விரும்புவர் என்பதால் பொதுச் சேவைத் துறை ஊழியர்கள் மக்களுக்கு உடனுக்குடன் தகவல்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மக்களுக்கு மனநிறைவான சேவையை வழங்குவதை உறுதிப்படுத்தும் பொருட்டு மாநில மற்றும் கூட்டரசு நிலையிலான இலாகாக்களுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது அவசியம் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
“எல்லோரும் குறைந்தது ஒரு சமூக வலைத்தள கணக்கைக் கொண்டிருக்க வேண்டும். ஃபேஸ்புக், டுவீட்டர் அல்லது இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அவர்கள் கொண்டிருக்க வேண்டும். இதுபோன்ற கணக்கை வைத்திருக்கும்போது சுற்று வட்டாரங்களில் என்ன நடக்கிறது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும்” என்றார் அமிருடின்.
“சம்பவம் நடந்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்குப் பின்னரே இது குறித்த தகவல் மக்களுக்குத் தெரிய வரும் என்று சொல்ல முடியாது. காரணம் இப்போது எல்லோராலும் உடனுக்குடன் தகவலைத் தெரிவிக்க முடியும்” என்று அவர் மேலும் சொன்னார். டேவான் ஜூப்ளி பேராவில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில பொதுச் சேவை ஊழியர்களின் மாதாந்திர கூட்டத்தில் அமிருடின் மேற்கண்டவாறு பேசினார்.