நாட்டில் இந்து ஆலயங்கள் வீற்றிருப்பது மீது சில அரசாங்க ஏஜென்சிகளும் சில அரசியல் வாதிகளும் காட்டும் அலட்சியங்களே, பல இடங்களில் ஆலயங்கள் அகற்றப் படுவதற்குக் காரணமாக இருக்கிறது. ஒரு இந்து ஆலயம் மாற்று இடமோ அல்லது முறையான பேச்சுவார்த்தைகளோ இன்றி இடிக்கப்படும் பொழுது உடைவது, ஆலயம் மட்டுமல்ல நாட்டிலுள்ள இந்துக்களின் சமய நம்பிக்கை.! அங்கே நொறுங்குவது தெய்வச் சிற்பங்கள் மட்டுமல்ல இந்நாட்டு மக்களிடையே நிலவும் ஒற்றுமை என்பதனை அவர்கள் அறிவதில்லை என்கிறார் திரு.நாதன்.
நாட்டு நலனுக்காகச் சிறிது விட்டுக்கொடுக்கும் போக்குடன், பிரச்சனைகளை முறையாக அணுகினால், எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு என்பதையே சுங்கை சீடு ஸ்ரீ மதுரை வீரன் மற்றும் ஸ்ரீ முனீஸ்வரர் நாகேஸ்வரி ஆலயத்திற்குக் கிடைத்த வெற்றி. காட்டுகிறது. கோவிலுக்கு மாற்று நிலமும், உதவித்தொகையும் கிடைத்துள்ளது. என்றார் கோல லங்காட் சுங்கை சீடு வட்டார இந்தியச் சமூகத் தலைவர் திரு.நாதன்.
இவ்வாண்டு ஆரம்பத்தில் மூன்று இந்து கோவில்கள் அமைந்திருக்கும் இடங்களை மேம்பாட்டு நிறுவனம் உரிமை கொண்டாடி அவற்றை அப்புறப்படுத்த நோட்டீஸ் வழங்கியது. இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின் தலையீட்டின் வழி, அந்த நோட்டீஸ் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டு, ஒரு கோவில் அங்கேயே நிலை நிறுத்த பட்டது
சுங்கை சீடு வட்டார இந்தியச் சமூகத் தலைவர் திரு.நாதன் மற்றும் கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரின் அரசியல் செயலாளரும் கோல லங்காட் நகராண்மைக்கழக உறுப்பினருமான திரு.ஹரிதாஸ் ஆகியோரின் இடைவிடாத முயற்சியாலும், மற்ற 2 கோவில்களின் தலைவர்கள் ஒன்றுபட்டுப் புதிய இடத்திற்கு மாறிச் செல்ல இணங்கினர்.
இந்தக் கோவில்களுக்குத் தலா 10 ஆயிரம் சதுர அடி நிலத்தையும், மாற்று இடத்தில் வழிபாட்டு தலம் அமைக்கவும் ரி.ம 22.500 வழங்கவும் மேம்பாட்டு நிறுவனம் இணங்கியது
சிலாங்கூர் மாநில விதிப்படி ஆலயங்களுக்கு ஒதுக்கப்பட்ட மேற்படி நிலத்தை மேம்பாட்டு நிறுவனம் அதன் திட்டவரைவில் உட்படுத்தி இருக்க வேண்டும். அதன் பின் . அந்த நிலங்களைக் கோல லங்காட் நகராண்மைக் கழகத்தின் வழி, சம்பந்தப்பட்ட கோவில்களின் பெயரில் மாநில அரசின் பதிவேட்டில் இடம் பெறச் செய்ய வேண்டும். ஆலயங்கள் கெஜட் எனப்படும் மாநில அரசின் பதிவேட்டில் இடம்பெற, ஆலய நிர்வாகங்கள் சங்கங்களின் பதிவகத்தில் தங்களைப் பதிந்திருக்க வேண்டும்.