ஷா ஆலம், அக் 3- வர்த்தக லைசென்ஸ் விண்ணப்பம் மற்றும் புதுப்பிக்கும் நடவடிக்கையை சிலாங்கூரிலுள்ள 12 ஊராட்சி மன்றங்களும் இணையம் வழி மேற்கொள்ளவுள்ளன.
வரும் 2025ஆம் ஆண்டிற்குள் சிலாங்கூரை விவேக மாநிலமாக்கும் திட்டம் மற்றும் ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் முயற்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
இ-லைசென்ஸ் எனப்படும் இந்த நடைமுறை கட்டங் கட்டமாக அமல்படுத்தப்படும். சுபாங் ஜெயா மாநகர் மன்றம் உள்ளிட்ட சில ஊராட்சி மன்றங்கள் இத்திட்டத்தை அமல்படுத்தி உள்ளன. பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றமும் இதன் தொடர்பில் செயலி ஒன்றை அடுத்த வாரம் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிகிறேன் என்றார் அவர்.
கோவிட் நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் இவ்வேளையில் பொதுமக்கள் தங்கள் அலுவல்களைக் கவனிக்க ஊராட்சி மன்றங்களுக்கு நேரடியாக வருவதை தவிர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும் இந்நடவடிக்கை அமைவதாக அவர் குறிப்பிட்டார்.
தேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஸ்மார்ட் சிலாங்கூருடன் மை டெபிட் இயக்கத்தில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மக்கள் தகவல் தொழில்நுட்பத்தை அறிந்தவர்களாகவும் வர்த்தக நடவடிக்கைகளில் அதனைப் பயன்படுத்துபவர்களாகவும் இருந்தால் மட்டுமே இலக்கவியல் யுகத்திற்கு மாறும் கனவு நனவாகும் என்றும் அவர் சொன்னார்.