ஷா ஆலம், நவ 17- அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் பிறந்த 508 முதியோருக்கு பெர்மாத்தாங் சட்டமன்ற தொகுதி ஏற்பாட்டில் ஜோம் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன. கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக இந்த பற்றுச் சீட்டுகள் வழங்கும் நிகழ்வு எஸ்.ஒ.பி எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை பின்பற்றி மேற்கொள்ளப் படுகிறது. மூத்த குடிமக்கள் உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த பற்றுச் சீட்டுகளை முதல் கட்டமாக நேற்று 77 பேர் பெற்றதாக பெர்மாத்தாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரோசானா ஜைனால் அபிடின் கூறினார். இந்த உதவித் திட்டத்தில் பங்கு பெறுவோர் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் தொகுதி அலுவலகம் வந்து அந்த பற்றுச் சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். அந்த பற்றுச் சீட்டுகளை கொண்டு பாசீர் பெனாம்பாங்கில் உள்ள முஸ்தபா பேரங்காடியில் பொருள்களை வாங்கி கொள்ளலாம் என்றார் அவர். அறுபது வயதை அடைந்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் இத்திட்டத்தை சிலாங்கூர் அரசு உருவாக்கியுள்ளது. பிறந்த மாதத்தை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு 100 வெள்ளியை மதிப்புள்ள பற்றுச் சீட்டுகள் வழங்கப்படும். இந்த உதவித் திட்டம் தொடர்பில் மேல் விபரங்கள் அறிய விரும்புவோர் http://mesra.Hamas.my/ smue/. என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம்.