ஷா ஆலம், டிச 6– தொற்று நோய் பரவலைத் தடுப்பதற்கு ஏதுவாக அந்நிய நாட்டினர் உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் முறையான தங்குமிட வசதியை ஏற்படுத்தித் தரும்படி முதலாளிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்களுக்கு முறையானத தங்குமிட வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்பதை 1990ஆம் ஆண்டு வீடமைப்பு மற்றும் தங்குமிட தரச் சட்டத்தின் 446வது பிரிவு வலியுறுத்துவதாக வீடமைப்பு மற்றும் நகர்ப்புற நல்வாழ்வுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
மலேசிய சுகாதார அமைச்சின் சுகாதார கழகம் கணித்ததை விட கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் அதிகரித்ததற்கு தொழிலாளர் தங்குமிடங்களில் காணப்படும் நெரிசல் மிகுந்த சூழலும் காரணமாக அமைந்துள்ளதாக அவர் சொன்னார்.
அந்நியத் தொழிலாளர்களுக்கான தங்குமிடங்கள் நெரிசல்மிக்கதாகவும் குறுகலானதாகவும் உள்ளதாக உள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக கருதுகிறோம். இப்பிரச்னையைக் களைவதில் முதலாளிகள் ஆக்ககரமான பங்கினை ஆற்ற வேண்டும் என்றார் அவர்.
அந்நியத் தொழிலாளர்கள் ஒருபோதும் புறக்கணிக்கப்படக் கூடாது. மாறாக கோவிட்-19 நோய்த் தொற்றுச் சம்பவங்களை தடுப்பதற்கு ஏதுவக அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தாக வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டுத் தொழிலாளர்களும் அந்நியத் தொழிலாளர்களும் ஒரு ஸ்தாபனத்தின் அல்லது நிறுவனத்தின் சொத்தாக விளங்குவதால் அவர்களின் நலன் பேணப்படுவது மிக அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.