ஷா ஆலம், டிச 14- சிலாங்கூர் மாநிலத்தில் நீர் தூய்மைக்கேட்டை சமாளிப் பதற்காக 20 கோடி வெள்ளி செலவிலான திட்டத்தை மாநில அரசு மேற்கொள்ளவிருக்கிறது. நான்கு திட்டங்களை உள்ளடக்கிய இந்த நீர் தூய்மைக்கேட்டு தடுப்பு பணிகள் அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கி 15 மாதங்களில் முற்றுப் பெறும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். நீரை இயற்கையான முறையில் தெளிவானதாகவும் தூய்மையானதாகவும் ஆக்குவதற்கு நானோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று அவர் சொன்னார். தூய்மைக்கேடு ஏற்படும் பட்சத்தில் ஆற்றின் நீரோட்டத்தை நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அல்லாமல் வேறு தடங்களுக்கு மாற்றுவதும் இத்திட்டத்தில் அடங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். மாசடைந்த ஆற்று நீருக்கு பதிலாக ஹோராஸ் மற்றும் ஓ.ஆர்.எஸ். திட்டத்தின் கீழ் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு பொதுமக்களின் ஐந்து நாள் தேவைக்கு பயன்படுத்தப்படும் என்று அவர் சொன்னார். கடந்த அக்டோபர் மாதம் மாநில சட்டமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த மந்திரி புசார், நீர் விநியோகத் தடையை சமாளிப்பதற்கான ஐந்து திட்டங்களை அறிவித்தார்.