ஜோகூர் பாரு, ஜகன 9– நாட்டில் கோவிட்-19 சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தால் மாவட்ட மற்றும் மாநில எல்லைகளைக் கடப்பதற்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கும்படி தேசிய பாதுகாப்பு மன்றத்தை சுகாதார அமைச்சு கேட்டுக் கொள்ளும்.
நாட்டில் தற்போது காணப்படும் கோவிட்-19 சம்பவங்களின் அதிகரிப்புக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் வழங்கப்பட்ட மாவட்ட மற்றும் மாநில எல்லைகளைக் கடப்பதற்கான அனுமதியே காரணம் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா கூறினார்.
இம்மாதம் முதல் மேற்கொள்ளப்படும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பகுதிகளில் வேலை செய்யும் அந்நியத் தொழிலாளர்களுக்கான கட்டாய கோவிட்-19 சோதனையும் நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை உயர்வுக்கு காரணமாக விளங்குவதாகவும் அவர் சொன்னார்.
ஜனவரி முதல் தேதி தொடங்கி அந்நியத் தொழிலாளர்களுக்கு கட்டாய கோவிட்-19 சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என முதலாளிகளுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதிகளவிலான சோதனைகளை மேற்கொள்ளும் போது நோய் கண்டவர்களின் எண்ணிக்கையும் உயர்வு காண்கிறது. எனினும் நோயாளிகளின் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகமாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றார் அவர்.
தொழில்துறைகள் மீண்டும் திறக்கப்பட்ட போது அமல்படுத்தப்பட்ட எஸ்.ஓ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட் சீரான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படாததே இந்த எண்ணிக்கை உயர்வுக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.