ஷா ஆலம், ஜன 25- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட உணவு உற்பத்தி துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சிலாங்கூர் மாநில அரசு 15 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் மீனவர்களுக்கு பெட்ரோலுக்கான பற்றுச் சீட்டுகளும் விவசாயிகளுக்கு வேளாண் பொருள்களும் கால்நடை வளர்ப்போருக்கு தீவணங்களும் விரைவில் வழங்கப்படும் என்று விவசாயத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார். இத்தகைய திட்டங்களின் வாயிலாக விவசாயத் துறை சார்ந்தவர்களின் சுமையை குறைக்க முடியும் என்பதோடு அவர்கள் தொடர்ந்து தாங்கள் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு உற்பத்தியையும் வருமானத்தையும் பெருக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு நேரடியாகவும் விரிவான அளவிலும் உதவிகளை வழங்கும் என்று அவர் மேலும் சொன்னார். மீனவர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் உள்ளிட்ட விவசாயத் துறையில் உள்ளவர்களுக்கு உதவும் நோக்கில் 20 லட்சம் வெள்ளியை சிலாங்கூர் அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த 20 ஆம் தேதி கூறியிருந்தார்.