MEDIA STATEMENTPBT

சிலாங்கூர் கால்பந்து சங்க முன்னாள் செயலாளர் டத்தோ அந்தோணிசாமியின் மறைவுக்கு  சுல்தான் ஷராபுடின் அனுதாபம்

ஷா ஆலம், ஏப் 6– சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் டத்தோ ஏ.அந்தோணிசாமியின் மறைவுக்கு மாட்சிமை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார். அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தனது இரங்கலை அவர் தெரிவித்துக் கொண்டார்.

மறைந்த கால்பந்து வீரர்களான டத்தோ மொக்தார் டஹாரி மற்றும் டத்தோ  சந்தோக் சிங் காலத்தில் சிலாங்கூர் கால்பந்து விளையாட்டுத் துறைக்கு பொற்காலத்தை ஏற்படுத்தி தருவதில் டத்தோ அந்தோணிசாமி ஆற்றிய பங்களிப்பு மற்றும் அர்பணிப்பை சுல்தான் பெரிதும் போற்றுவதாக சிலாங்கூர் அரச அலுவலகம் வெளியிட்ட அறிக்கை கூறியது.

மாநில கால்பந்து துறைக்கு அந்தோணிசாமி ஆற்றிய பங்கினை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு  கடந்த 2016ஆம் ஆண்டில் சுல்தான் டத்தோ அந்தஸ்தை தாங்கி வரும் டி.எஸ்.ஐ.எஸ் விருதை சுல்தான் வழங்கி கௌரவித்ததாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.

சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கத்திற்கும் மாநில கால்பந்து விளையாட்டுத் துறைக்கும் ஆற்றிய பங்களிப்புக்காக அன்னார் போற்றுதலுக்குரிய பெருமகனாக என்றென்றும் நினைவுக்கூறப்படுவார் என சுல்தான் அவர்களும்  சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் தலைவரான ராஜா மூடா துங்கு அமிர் ஷாவும் குறிப்பிட்டுள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறியது.

அறுபதாம் ஆண்டுகள் தொடங்கி  மாநில கால்பந்து விளையாட்டுத்  துறையில் ஈடுபாடு காட்டிய டத்தோ அந்தோணிசாமி, 1968இல் மாநில கால்பந்து சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக பொறுப்பேற்றார். சங்கத்தின் செயலாளர் பதவியை 1974ஆம் ஆண்டில் ஏற்ற அவர் 19 ஆண்டுகள் தொடர்ச்சியாக அப்பதவியை வகித்து வந்தார்.

 


Pengarang :