ஷா ஆலம், ஏப் 9- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் நாளை காஜாங் மற்றும் பண்டார் புஞ்சா ஆலமில் நடைபெறவுள்ளது. பண்டார் புஞ்சா ஆலம், ஃபாசா 2, ஆலம் சீனார் மண்டபத்திலும் காஜாங், தாமான் செத்தியா வலைப்பந்து மைதானத்திலும் காலை 9.00 மணி தொடங்கி மாலை 4.00 மணி வரை இந்த பரிசோதனை இயக்கம் நடைபெறும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். புஞ்சா ஆலம், ஃபாசா 3, சீனார் ஆலம், ஆலம் சூர்யா, தாமான் ஆலம் ஜெயா, தாமான் ஆலம் சூத்திரா, ஆலம் பெர்டானா, சவுஜானா உத்தாமா, ஸ்ரீ பெர்டானா குடியிருப்பாளர்கள் இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள அழைக்கப்படுகிறார்கள். காஜாங்கில் நடைபெறும் இந்த நிகழ்வில் கம்போங் சுங்கை சுவா, டேசா கேக்வா, தாமான் செத்தியா, சுங்கை சுவா தொழில் பேட்டை, தாமான் காஜாங் ராயா வட்டார மக்கள் கலந்து பயன் பெறுமாறு முகநூல் வழி வெளியிட்ட அறிக்கையில் அவர் கேட்டுக் கொண்டார். பரிசோதனை இயக்கம் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக செலங்கா செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார். Screening.selangkah.my எனும் அகப்பக்கம் வாயிலாக இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் தொடர்பில் மேல் விபரங்கள் பெறலாம்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2021/03/angen-test-3PSX_20210313_141200-1-960x640.jpg)