ஷா ஆலம், ஏப் 13- கோவிட-19 புதிய தொற்று மையங்கள் உருவாவதை தடுக்க சிலாங்கூர் மாநிலத்தில் அனைத்து ரமலான் சந்தைகளும் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
நோய்த் தொற்றின் அபாயம் கருதி கடந்த 2019ஆம் ஆண்டில் 14,000 ஆக இருந்த ரமலான் சந்தைகளில் வியாபாரம் செய்வோரின் எண்ணிக்கை இவ்வாண்டு 11,000 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
ஜன நெரிசலைத் தவிர்க்கும் விதமாக கடைகளுக்கிடையிலான இடைவெளியை அதிகரித்த காரணத்தால் ரமலான் சந்தைகளில் வியாபாரம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
வர்த்தகர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் போதுமான இடைவெளி இருப்பதை உறுதி செய்யும் வகையில் சந்தைகளின் நுழைவாயில் மற்றும் வெளியேறும் வழிகள் கடுமையாக கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
‘பாசார் தொற்று மையம்‘ உருவாவதை தடுக்க ரமலான் சந்தைகளில் கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை அமல் செய்யும்படி மந்திரி புசார் ஊராட்சி மன்றங்களுக்கு கடந்த 2ஆம் தேதி உத்தவிட்டிருந்தார்.