கோலாலம்பூர், ஏப் 26- ஆயுதமேந்தி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் நான்கு ஆடவர்களை போலீசார் கோம்பாக் மற்றும் செந்துல் வட்டாரத்தில் கைது செய்துள்ளனர். இக்கும்பல் கடந்த வெள்ளிக் கிழமை விடியற்காலை பத்து கேவ்ஸ், பண்டார் பாரு செலாயாங்கில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் கொள்ளையிட்டதாக கூறப்படுகிறது.
ஐம்பத்தெட்டு வயதுடைய அந்த உரிமையாளர் விடியற்காலை 3.00 மணியளவில் கடையை திறந்த போது பாராங் கத்தியேந்திய இரு ஆடவர்கள் உள்ளே நுழைந்ததாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அரிஃபாய் தராவே கூறினார்.
அந்த உரிமையாளரின் கால்களைக் கட்டி கடையின் பின்புறம் கிடத்திய அக்கும்பல் கடையிலிருந்த 2,000 வெள்ளி மதிப்பிலான சிகிரெட், ரொக்கம் உள்ளிட்ட பொருள்களைக் கொள்ளையிட்டதோடு உரிமையாரின் மகளின் மோதிரத்தையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாக அவர் சொன்னார்.
இச்சம்பவம் தொடர்பில் புகார் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து நடவடிக்கை மேகொண்ட போலீசார் 23 மற்றும் 35 வயதுடைய ஆடவர்களைக் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து டோயோட்டா வியோஸ் ரகக்கார், மூன்று கைப்பேசிகள், பாராங் கத்தி, ஒரு இரகசிய கண்காணிப்பு கேமரா ஆகியவற்றையும் கைப்பற்றினர் என்றார் அவர்.
கைதான நபர்கள் மீது குற்றச்செயல் மற்றும் போதைப் பொருள் தொடர்பான குற்றப்பதிவுகள் உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறிய அவர், இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஆயுதமேந்தி கும்பலாக கொள்ளையிட்டதாக குற்றவியல் சட்டத்தின் 395/397 பிரிவுகளின் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது என்றார்.
பிடிபட்ட நபர்கள் விசாரணைக்காக ஆறு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வேளையில் இக்கும்பலின் எஞ்சிய உறுப்பினர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.