ஷா ஆலம், ஏப் 29- தேர்வை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மாணவர்களின் அடைநிலையை மதிப்பீடு செய்யும் நடைமுறைக்கு மாற்றாக கல்வியில் புதிய முறையை அமல் செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளில் நாட்டின் கல்வி முறையில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டு விட்டதாக அவர் சொன்னார்.
தேர்வை அடிப்படையாக கொண்டிராத மதிப்பீட்டு முறையின் அமலாக்கம் குறித்து கடந்த 20 ஆண்டுகளாக நான் கேள்விப்பட்டு வருகிறேன். ஆனால், அத்திட்டம் இன்னும் அமல்படுத்தப் பட்டபாடில்லை. மாணவர்களின அடைநிலையை மதிப்பிடுவதற்கு நாம் இன்னும் தேர்வுகளைத்தான் நம்பியிருக்கிறோம் என்றார் அவர்.
தேர்வின் முடிவுகளை அடிப்படையாக கொண்ட கல்வி எந்த அளவுக்கு மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யும் என்பதை நாம் யோசிப்பதற்கான தருணம் வந்து விட்டது என்று அவர் மேலும் கூறினார்.
புதிய இயல்பில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் தேர்வை அடிப்படையாக கொண்ட கல்வ முறை அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக உள்ளதாகவும் மந்திரி புசார் குறிப்பிட்டார்.
ஆகவே, மாணவர்கள் கல்வியில் பின்தங்கிவிடாமலிருப்பதை உறுதி செய்ய மாநில அரசு பல்வேறு கல்வி உபகரணங்களை மாணவர்களுக்கு தயார் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யு.பி.எஸ்.ஆர். தேர்வை முற்றாக அகற்றுவதற்கும் பி.டி.3 தேர்வை இவ்வாண்டில் ரத்து செய்வதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு நேற்று அறிவித்தது.