ஷா ஆலம், ஏப் 29- கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்படும் பட்சத்தில் ‘சிலாங்கூர் டியூட்டர்‘ எனும் கல்வித் திட்டத்தை தொடர சிலாங்கூர மாநில அரசு தயாராக உள்ளது.
இணையம் வாயிலாக கல்வி கற்பதற்குரிய வாய்ப்பினை வழங்கும் இத்திட்டடம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களிடமிருந்து இதற்கு ஆதரவு கிடைத்ததாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சொன்னார்.
சிலாங்கூர் டியூட்டர் திட்டத்திற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளும் பி.டி.பி.ஆர். இத்திட்டத்தை இது மிஞ்சிவிடும் சாத்தியம் உள்ளது என்று அவர் கூறினார்.
இத்திட்டத்தில் மேம்பாட்டைக் கொண்டு வரக்கூடிய பல கட்டத் திட்டங்களை தொடக்கி விட்டோம். தற்போது தேசிய கல்வித் திட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன. ஆகவே இத்திட்டத்திற்கு மதிப்புக் கூட்டும் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம் என்றார் அவர்.
இணையம் வாயிலாகவும் நேரடியாகவும் கல்வி கற்கும் முறைகளை ஒருங்கிணைப்பதன் வாயிலாக இந்த இலவச கல்வித் திட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.