கிள்ளான் ஜூன் 3;- கடந்த மே 25 ஆம் தேதி கிள்ளான் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத் தலைவர் நாகப்பன் அவர்களில் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ், கிள்ளான் நகராண்மைக்கழக உறுப்பினர்கள் திரு நலன், திரு.மகேந்திரன், திரு. பிரபு ஆலயத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் கிள்ளான் லிட்டல் இந்தியத் தொழிலதிபர்கள் சங்கத் தலைவர் சார்ல்ஸ் மாணிக்கம், சங்கச் செயலாளர் த.சிவபாதசேகரன் தொழிலதிபர்கள் சங்கத் து.தலைவர், பொருளாளர் ஆகியோர் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் பங்கு கொண்டனர்.
அந்தக்கூட்டத்தில் கிள்ளான் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்திற்கு அருகில் ” செட்டி பாடாங் ” என்று விளங்கி வந்த விளையாட்டுத் திடலுக்கு, இப்பொழுது புதுத் தோற்றம் அளிக்கப்பட்டு டத்தாரான் கிள்ளான் என்று பெயர் மாற்றம் காணவுள்ளது.
இதற்குத் தங்களின் வருத்தத்தையும், எதிர்ப்பையும் அவர்கள் குழு தெரிவிப்பதாக ஆலய நிர்வாக உறுப்பினர் டாக்டர் ராமநாதன் தெரிவித்தார். இந்தப் பெயர் மாற்றம், இவ்விடத்துடன் இந்தியர்களுக்கு இருந்த பூர்வீகத் தொடர்பினை அழிப்பதற்கு வழியமைத்துவிடும் என்று அக்குழு தயங்குவதாக அவர் கூறினார்.
அவர்களின் ஆட்சேபத்தைச் செவிமடுத்த கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ், அவர்களின் ஆட்சேபம் குறித்து அன்று மாலை கிள்ளான் நகராண்மைக்கழக தலைவரிடம் பேசவிருப்பதாகக் கூறினார்.
இந்தியர்களின் ஆதங்கத்தின் மீது அக்கறைகொண்டு தன்னுடன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல் சந்தியாகு, பண்டமாரன் சட்டமன்ற உறுப்பினர் தோணி லியோங், கோலக் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிசாம் ஆகியோரும் கிள்ளான் நகராண்மைக்கழக உறுப்பினர்களும் நகராண்மைக்கழக தலைவரை சந்தித்து ஆலய மற்றும் பொது இயக்கங்களின் ஆட்சேபனையை தெரிவித்தனர்.