பெட்டாலிங் ஜெயா, ஜூன் 20– கம்போங் லிண்டோங்கானில் நேற்று நடைபெற்ற மூன்றாம் கட்ட இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் அந்நிய நாட்டினரின் பங்கேற்பு அதிகரித்துள்ளது.
இரண்டாம் கட்ட பரிசோதனை இயக்கத்தில் இரண்டு விழுக்காடாக இருந்த அந்நிய நாட்டினரின் பங்கேற்பு இம்முறை ஐந்து விழுக்காடாக அதிகரித்துள்ளதாக ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார் கூறினார்.
இந்த பரிசோதனை இயக்கத்தில் அதிகமானோர் பங்கேற்பதை உறுதி செய்வதற்காக தமது குழுவினர் மேற்கொண்ட தீவிர விளம்பர மற்றும் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர் சொன்னார்.
எங்களின் அனைத்து விளம்பரங்களிலும் ‘அந்நிய நாட்டினர் வரவேற்கப்படுகின்றனர்‘ என்ற வாசகத்தை இடம்பெறச் செய்திருந்தோம். இந்த வாசகம், பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்பதற்குரிய தைரியத்தை அந்நியத் தொழிலாளர்கள்கு கொடுத்தது என்றார் அவர்.
ஸ்ரீ செத்தியா தொகுதியில் பல தொழிற்சாலைகள் உள்ளன. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் அவை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. இங்கு வேலை செய்வோரில் பெரும்பான்மையினர் அந்நிய நாட்டினராக உள்ளதால் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவர்களையும் இந்த சோதனை இயக்கத்தில் இணைத்துக் கொள்ள முடிவெடுத்தோம் என அவர் மேலும் தெரிவித்தார்.