ஷா ஆலம், ஜூலை 24- மோரட்டோரியம் எனப்படும் கடனைத் திரும்பச் செலுத்துவதை தொழில்முனைவோருக்கான வர்த்தக கடனுதவி அமைப்பான ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியம் மேலும் ஆறு வாரங்களுக்கு ஒத்திவைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
வர்த்தகர்களில் பலர் இன்னும் கோவிட்-19 நோய்த் தொற்று தாக்கத்திலிருந்து மீளாமலிருப்பதை கருத்தில் கொண்டு இந்த சலுகையை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படுவதாக தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கு ஏற்கனவே வழங்கப்பட்டச் சலுகை இம்மாத இறுதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனைத் கருத்தில் கொண்டு மேலும் ஆறு வாரங்களுக்கு அந்த சலுகையை நீட்டிப்பது பரிசீலித்து வருகிறோம் என்றார் அவர்.
கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வணிகர்களுக்கு தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தாலும் பொருளாதாரம் கண்ணிமைக்கும் நேரத்தில் மீட்சியடைந்து விடாது என்று அவர் மேலும் சொன்னார்.
இங்குள்ள செக்சன் 19, டி பல்மா தங்கும் விடுதியில் உள்ள தடுப்பூசி மையத்தில் மேற்கொள்ளப்படும் பத்து தீகா தொகுதிக்கான செல்வேக்ஸ் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.