ஷா ஆலம், ஜூலை 25– ஊழல் அல்லது அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் தரப்பினர் குறிப்பாக அரசு அதிகாரிகள் விஷயத்தில் மாநில அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது.
கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்வையொட்டி நடத்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுடனான சிறப்பு சந்திப்பின் போது இந்த நிலைப்பாட்டை தாம் மிகத்தெளிவாக எடுத்துரைத்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
ஊழல் தொடர்பில் சிலாங்கூர் மாநில அரசு அதிகாரிகள் சிலரை ஊழல் தடுப்பூ ஆணையம் விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளதாக தமக்கு தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மாநில அரசும் சில துறைகளை அணுக்கமாக கண்காணித்து வருவதாகவும் குற்றம் புரியும் தரப்பினருக்கு எதிராக தமது தரப்பு நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், அமலாக்கத் தரப்பின் விசாரணைக்குட்பட்டுள்ள அந்த அதிகாரிகளுக்கு எதிராக குற்றம் இன்னும் நிரூபிக்கப்படாததால் அவர்களை குற்றவாளி என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்றும் பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.