கோலாலம்பூர், ஜூலை 26- அவசரகாலத்தின் போது சிலாங்கூர் அரசின் அதிகார வரம்பு தொடர்பில் மத்திய அரசு கடைபிடித்த முரண்பட்ட போக்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.
அனைத்து அதிகாரங்களும் தேசிய பாதுகாப்பு மன்றத்திற்கே உள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் முன்னர் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இப்போது அதிலிருந்து முரண்படுகிறார். அப்படியென்றால் சிலாங்கூர் அரசு அவசரகாலத்தை மீறி விட்டதாக பொருள்படுமா? இவ்விவாகரம் தொடர்பில் நான் துணைப் பிரதமரிடமிருந்து விளக்கம் கோருகிறேன் என்று அவர் சொன்னார்.
இன்று தொடங்கி நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றிய போது போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கு முன்னர் கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக சிலாங்கூரில் உள்ள தொழிற்சாலைகளை மூடுவதற்கு ஊராட்சி மன்றங்கள் நடவடிக்கை எடுத்த போது அதிகார வரம்பு பிரச்னை வெடித்தது.
நோய்த் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அத்தியாவசியமில்லாத தொழில் துறைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசு வலியுறுத்தியதாகவும் எனினும், இவ்விவகாரத்தில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வழக்கறிஞர் ஷியாரேட்சான் ஜோஹான் கூறியிருந்தார்.