கோலாலம்பூர், ஆக 9- அண்மையில் நடைபெற்ற சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தின் எதிரொலியாக மூன்று புதிய தொற்றுகள் உள்பட 88 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
கடந்த மாதம் 26 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்ற அந்த கூட்டத் தொடர் சம்பந்தப்பட் 85 நோய்த் தொற்று சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இரு தினங்களுக்கு முன்னர் நோர் ஹிஷாம் கூறியிருந்தார்.
அவர்களில் 17 பேர் கூட்டத் தொடரின் போது நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள் என்றும் எஞ்சியோர் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
புதிதாக பதிவான மூன்று சம்பவங்களும் நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்தவர்கள் சம்பந்தப்பட்டவை எனக் கூறிய நோர் ஹிஷாம், இதன் வழி கூட்டத் தொடர் சம்பந்தப்பட்ட நோய்த் தொற்று எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது என்றார்.
பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணியை மாவட்ட சுகாதார இலாகா மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னெச்சரிக்கை நடவடிகையாக நாடாளுமன்றக் கூட்டம் முடிந்தவுடனே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி சம்பந்தப்பட்டவர்கள் பணிக்கப்பட்டது தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அவர் கூறினார்.
நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் உடல் நிலை தொடர்பான மைசெஜாத்ரா செயலி வாயிலாக தொடர்ந்து கண்காணித்து வருவதோடு நோய்க்கான அறிகுறி தென்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறும்படியும் அவர் அறிவுறுத்தினார்.