ஷா ஆலம், ஆக 13- இளைய தலைமுறையினர் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்கான வாய்ப்பினை பெரியவர்களும் தலைவர்களும் வழங்க வேண்டும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் ராஜா மூடா வலியுறுத்தியுள்ளார்.
இளையோர் குரலை ஒலிக்கவிடாமல் செய்து அவர்களுக்கு பொறுப்புகளும் வழங்கப்படாது போனால் பிரச்னைகளைக் கையாள்வதற்கான வழிமுறைகளை அவர்கள் தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்று துங்கு அமிர் ஷா கூறினார்.
இளைய தலைமுறையினரை மதிப்பிடும் விஷயத்தில் பெரியவர்கள் வெளிப்படையான சிந்தனைப் போக்கை கொண்டிருக்க வேண்டும். அவர்கள் மிகவும் இளையவர்கள், அனுபவம் இல்லாதவர்கள், எதையும் முறையாக செய்யத் தெரியாதவர்கள் என்று எண்ணக்கூடாது என்றார் அவர்.
அனுபவத்தின் வாயிலாக கற்றுக் கொள்ள இளையோருக்கு வாய்ப்பளிப்பது பெரியவர்களின் கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“சேய்“ எனப்படும் சிலாங்கூர் இளைஞர் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற “இளையோர் தலைமைத்துவம்- நீடித்த மேம்பாட்டு இலக்கை அடைவதில் இளையோரின் பங்கு“ எனும் தலைப்பிலான விவாத நிகழ்வில் ராஜா மூடா இவ்வாறு கூறினார். இந்த விவாத நிகழ்வு வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
தொழில்துறையில் பயிற்சி பெறும் மாணவர்கள் கூட்டங்களின் போது தங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்கு முதலாளிகள் வாய்ப்பினை வழஙகுவதன் மூலம் அவர்கள் தாங்கள் சார்ந்த துறைகளில் பிரகாசிப்பதற்குரிய வாய்ப்னை ஏற்படுத்த முடியும் என்றும் ராஜா மூடா குறிப்பிட்டார்.
இவ்வாறான வாய்ப்புகள் வழங்கப்படும் போது சம்பந்தப்பட்ட இளையோர் கருத்துக்களை சிறப்பான முறையில் முன்வைப்பது மற்றும் பிறரை கவரும் வகையில் உரையாற்றுவது போன்றவற்றில் தேர்ச்சி பெற முடியும் என்றார் அவர்.