கோலாலம்பூர், ஆக 14- நாட்டில் நேற்று வரை மொத்த மக்கள் தொகையில் 31.1 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 1 லட்சத்து 44 ஆயிரத்து 199 பேர் இரண்டு டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர்.
தடுப்பூசி பெற்றவர்கள் தொடர்பான ஆகக் கடைசி தரவுகளை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா, இதுவரை 1 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 566 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்றார்.
பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 2 கோடியே 68 லட்சத்து 51 ஆயிரத்து 765 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 71.4 விழுக்காட்டு பெரியவர்கள் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ள வேளையில், 43.3 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றுவிட்டனர் என்றார் அவர்.
நேற்று நாடு முழுவதும் 462,860 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 162,182 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 300,678 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.