புத்ரா ஜெயா, ஆக 14- நாட்டில் இதுவரை 11 கோவிட்-19 சுய பரிசோதனை கருவிகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.
அவற்றில் 7 கருவிகள் உமிழ்நீர் மாதிரியைக் கொண்டும் நான்கு கருவிகள் மூக்கின் வாயிலாகவும் சோதனையை மேற்கொள்ளக்கூடியவை என்று அவர் சொன்னார்.
சுகாதார அமைச்சின் மருத்துவ உபகரண அமலாக்கப் பிரிவின் அனுமதியைப் பெற்றுள்ள இந்த உபகரணங்களை அரசாங்க மற்றும் தனியார் மருந்தகங்களில் பெறலாம் என்று நேற்று இங்கு நடைபெற்ற கோவிட்-19 நோய்த் தொற்று மீதான செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
இந்த கருவிகளைக் கொண்டு கோவிட்-19 சோதனையை மேற்கொள்வோர் அதன் முடிவுகளை மைசெஜாத்ரா செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், இதன் மூலம் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை சுகாதார அமைச்சினால் மேற்கொள்ள இயலும் என்றார்.