ஷா ஆலம், ஆக 26- பி.ஜே.டி. லிங்க் எனப்படும் பெட்டாலிங் ஜெயா டிஸ்பெர்சல் லிங்க் நெடுஞ்சாலைத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்னர் சிலாங்கூர் அரசு நிர்ணயித்துள்ள நிபந்தனைகளை ஒப்பந்த நிறுவனம் பூர்த்தி செய்ய வேண்டும்.
வீடமைப்புப் பகுதிகளின் ஊடே செல்லும் இத்திட்டத்திற்கு நில மீட்பு மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு போன்ற பிரச்னைகள் எழுவதை தவிர்ப்பதற்கு இந்நடவடிக்கை அவசியமாகிறது என்று அடிப்படை வசதிகள் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.
இந்த நெடுஞ்சாலைத் திட்டம் தொடர்பில் மத்திய அரசுக்கும் அத்திட்டத்தை மேற்கொள்வதற்கு உத்தேசித்துள்ள நிறுவனத்திற்கும் இடையே இன்னும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த உத்தேச திட்டத்தில் பாதிக்கப்படும் மக்களுடன் சந்திப்பு நடத்துவது உள்பட சுற்றுச்சூழல் இடர் மதிப்பீடு மற்றும் சமூக இடர் மதிப்பீடு ஆகிய அம்சங்கள் மீதும் அந்நிறுவனம் ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று பி.ஜே.டி. லிங்க் நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஆகக் கடைசி நிலவரம் குறித்து புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜீவ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
இந்த நெடுஞ்சாலைத் திட்ட அமலாக்கத்தை ஒருங்கிணைப்பது தொடர்பில் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்துடன் பேச்சு நடத்தும்படி மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தை மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்