ஷா ஆலம், ஆக 31– பினாங்கு மாநிலத்திற்கு சிலாங்கூர் இரவலாக வழங்கும் 200,000 தடுப்பூசிகள் இன்று அம்மாநிலத்திடம் சேர்ப்பிக்கப்படும்.
பினாங்கு மக்கள் தடுப்பூசியை விரைந்து பெறுவதை உறுதி செய்வதில் சிலாங்கூர் அரசின் இந்த உதவி பெரிதும் துணை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரவலாக வழங்கும் 200,000 தடுப்பூசிகள் தவிர்த்து செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் மேலும் 20,000 தடுப்பூசிகள் அம்மாநிலத்திற்கு இலவசமாக வழங்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூரில் ஏற்பட்டதைப் போன்ற பிரச்னை பினாங்கிற்கும் ஏற்படக்கூடாது. ஆகவே அம்மாநிலத்திற்கு இரண்டு லட்சம் தடுப்பூசிகளை இரவலாகவும் இருபதாயிரம் தடுப்பூசிகளை இலவசமாகவும் வழங்கவிருக்கிறோம் என்றார் அவர்.
பினாங்கு மட்டுமின்றி இதர மாநிலங்களும் சிலாங்கூரிடமிருந்து தடுப்பூசிகளை இரவலாகப் பெறுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளதாக மாநில சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
நமது அண்டை மாநிலம் ஒன்றும் தடுப்பூசிகளுக்கு நம்மிடம் விண்ணப்பம் செய்துள்ளது. எனினும், இவ்விவகாரத்தில் பினாங்கு மாநிலத்தைப் போல் தளர்வுகளும் ஒருங்கிணைப்பும் ஏற்படுவதற்கு ஏதுவாக மத்திய அரசின் கவனத்திற்கு இதனைக் கொண்டுச் செல்லும்படி கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார் அவர்.