ஷா ஆலம், செப் 3– கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு உதவும் பொருட்டு 50 விழுக்காடு வரையிலான வாடகைக் கழிவு சலுகையை பி.கே.என்.எஸ்.எனப்படும் சிலாங்கூர் மேம்பாட்டுக் கழகம் வழங்கியுள்ளது.
ஷா ஆலம், பாங்கி, கோல சிலாங்கூர் ஆகிய இடங்களில் உள்ள காம்ப்ளெக்ஸ் பி.கே.என்.எஸ். மையங்களில் வர்த்தகம் புரிவோருக்கு இச்சலுகை வழங்கப்பட்டது.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி ஐந்து மாதங்களுக்கு இந்த வாடகை கழிவுச் சலுகை வழங்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இது தவிர, தாமதமாக வாடகையைச் செலுத்துவோருக்கு விதிக்கப்பட்ட வட்டித் தொகையை பி.கே.என்.எஸ். ரியல் எஸ்டேட் சென். பெர்ஹாட் நிறுவனம் கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ரத்து செய்ததாக அவர் சொன்னார்.
மேலும், கோல சிலாங்கூரில் உள்ள காம்ப்ளெக்ஸ் பி.கே.என்.எஸ் மையத்தில் முக்கியமற்ற துறைகளில் வியாபாரம் செய்வோருக்கு வாடகை விலக்களிப்பு சலுகை கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி முதல் தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் ஷா ஆலம் மற்றும் பாங்கியிலுள்ள பி.கே.என்.எஸ். காம்ப்ளெக்ஸ் வியாபாரிகளுக்கு நான்கு மாத காலத்திற்கு ஐம்பது விழுக்காட்டு வாடகைக் கழிவை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் நேற்று, கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பி.கே.என்.எஸ். காம்ப்ளெக்ஸ் வணிகர்களுக்கு உதவுவதற்கு மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து புக்கிட் மெலாவத்தி உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.