ஷா ஆலம், செப் 3– வெள்ளம் ஏற்படுவதைக் கண்டறிவதற்காக கோலக் கிள்ளான் பகுதியிலுள்ள தாமான் செலாட் டாமாய் மற்றும் தெலுக் காடோங் இண்டாவில் சி.சி.டி.வி. எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
இந்த கேமராக்களைப் பொருத்தும் பணி அடுத்த வாரம் மேற்கொள்ளப்படும் என்று கோலக் கிள்ளான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான் ஹூரி கூறினார்.
கடல் பெருக்கு மற்றும் அடை மழையின் போது வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளாக இவ்விரு குடியிருப்புகளும் விளங்குவதைக் கருத்தில் கொண்டு இந்த கேமராக்களைப் பொருத்தம் பணி மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
அனைத்து பகுதிகளையும் கண்காணிப்பதற்கு ஏதுவாக 360 டிகிரி சுழலக்கூடிய வகையில் இந்த கேமராக்கள் அமைக்கப்படும். இந்த கேமராக்கள் சூரிய சக்தியில் செயல்படக்கூடிய தன்மையைக் கொண்டவையாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த முயற்சியை முன்னெடுத்த சிலாங்கூர் மாநில வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை (ஜே.பி.எஸ்.) மற்றும் கிள்ளான் மாவட்ட ஜே.பி.எஸ். ஆகிய தரப்பினருக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சி.சி.டி.வி. திட்டம் கோலக் கிள்ளான் தொகுதியில் பரீட்சார்த்த முறையில் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் சொன்னார்.