கோலாலம்பூர், செப் 5- நாட்டிலுள்ள 18 வயதுக்கும் மேற்பட்ட மக்கள் தொகையில் 67.4 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 57 லட்சத்து 72 ஆயிரத்து 760 பேர் நேற்று வரை இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.
கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு பணிக்குழு இந்த தகவலை தனது டிவிட்டர் பதிவின் வழி வெளியிட்டுள்ளது.
பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 3 கோடியே 61 லட்சத்து 41 ஆயிரத்து 604 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அப்பணிக்குழு கூறியது,
நாட்டில் இதுவரை 2 கோடியே 4 லட்சத்து ஆயிரத்து 824 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். ஒரு முறை மட்டுமே செலுத்தக் கூடிய கேன்சினோ தடுப்பூசி பெற்றவர்களும் இதில் அடங்குவர் என அது தெரிவித்தது.
நேற்று நாடு முழுவதும் 300,501 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட வேளையில் அவர்களில் 134,559 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 165,942 பேர் இரண்டாது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.