ஷா ஆலம், செப் 5- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 465 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 500 வெள்ளி உதவித் தொகையை யாவாஸ் அறவாரியம் இதுவரை வழங்கியுள்ளது.
கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பின் கீழ் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்திற்காக இதுவரை 235,500 வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் பிரத்தியேக சிறார் கல்வி துறையின் (அனிஸ்) தலைவர் டேனியல் அல்-ரஷிட் ஹருண் கூறினார்.
கடந்த ஜூலை மாதம் முதல் இந்த உதவி நிதி வழங்கப்பட்டு வருவதாக சிலாங்கூர் கினிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் இத்திட்டத்திற்கு மாநில அரசு 600,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதுவரை 232,500 வெள்ளி அதாவது அந்நிதியில் 38 விழுக்காடு தகுதி உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது என்றார் அவர்.
இதர விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், தகுதி உள்ளவர்களுக்கு ஒவ்வொரு திங்கள்கிழமையும் கட்டங் கட்டமாக நிதி வழங்கப்படும் என்றார்.
இந்த உதவித் திட்டத்தின் வழி 1,200 பேருக்கு மட்டுமே உதவி வழங்க மாநில அரசு இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில் கடந்த ஜூலை முதல் தேதி தொடங்கி இதுவரை 7,000 விண்ணப்பங்களை நாங்கள் பெற்றுள்ளோம். இத்திட்டத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதை இது காட்டுகிறது என்றார் அவர்.