ஷா ஆலம், செப் 7– இணையம் வழி மேற்கொள்ளும் வர்த்தக நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்வதற்கு கோ டிஜிட்டல் திட்டத்தின் வழி 83 வணிகர்களுக்கு 343,000 வெள்ளி கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட வணிகர்களுக்கு 5,000 வெள்ளி வரை கடனுதவி வழங்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் இணையம் வழி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள இத்திட்டம் துணை புரியும். பொது முடக்கம் காரணமாக பல்வேறு இடையூறுகள் ஏற்பட்ட போதிலும் அவற்றைக் கடந்து இணைய வியாபாரத்தை விரிவாக்கம் செய்வதற்குரிய வாய்ப்பினை வணிகர்கள் பெறுவர் என எதிர் பார்க்கிறோம் என்றார் அவர்.
விவேக வியாபார முறையை உருவாக்கும் நோக்கில் சிலாங்கூர் அரசு அறிமுகப்படுத்தியுள்ள இலக்கவியல் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த கோ டிஜிட்டல் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
தங்கள் விற்பனை பொருள்களை சந்தைப் படுத்துவதற்கு உதவக் கையடக்க கணினி உள்ளிட்ட மின்னியல் சாதனங்களை வியாபாரிகள் வழங்குவதற்கு கடனுதவி வழங்க இத்திட்டம் வகை செய்கிறது. இத்திட்டத்திற்கு தொடக்க கட்டமாக 3,000 வியாபாரிகள் இலக்காக கொள்ளப்பட்டுள்ளனர்.