ஷா ஆலம், செப் 24- பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் வசிப்போர் இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் சொத்து மதிப்பீட்டு வரியைச் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அபராதத் தொகையைச் செலுத்துவதை தவிர்ப்பதற்கு ஏதுவாக மதிப்பீட்டு வரியை விரைந்து செலுத்தும்படி மாநகர் மன்றத்தின் ஊடக செயலகம் கூறியது.
மதிப்பீட்டு வரியைச் சரிபார்ப்பதற்கும் கட்டண பில்லை பிரதியெடுப்பதற்கும் https://ecukai.mbpj.gov.mbpjsalinanbil என்ற அகப்பக்கத்தை நாடும்படி அது கேட்டுக் கொண்டது.
மேலும் eCukai@MBPJ, ePay@MBPJ என்ற செயலி வாயிலாக மதிப்பீட்டு வரியை இணையம் வழி செலுத்தலாம் என்று அச்செயலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
வாடிக்கையாளர்கள் இணைய சேவையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். இதன் வழி வீட்டிலிருந்து வெளியேறுவதை தவிர்க்க இயலும் என்பதோடு அலுவலக நேரம் மட்டுமின்றி எந்த நேரத்திலும் கட்டணத்தை செலுத்தலாம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழுதுபார்ப்பு மற்றும் தரம் உயர்த்தும் பணிகளுக்காக மாநகர் மன்றத்தின் தலைமையகத்தில் உள்ள சேவை மற்றும் கட்டண முகப்பிடங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்தது.