ஷா ஆலம், அக் 11- தடுப்பூசி பெறுவதற்கு இன்னும் முன்பதிவு கிடைக்காத கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்று தொடங்கி தனியார் கிளினிக்குகளில் தடுப்பூசியை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
அரசாங்க சுகாதார மையங்களில் தடுப்பூசி பெறுவதற்கு கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு பணிக்குழு கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி வழங்கிய வாய்ப்புக்கு உபரியாக தனியார் கிளினிக்குகளில் தடுப்பூசி பெறுவதற்குரிய இந்த வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி பெறும் வாய்ப்பினை ஏற்படுத்துவதற்காக இத்திட்டத்தை அமல்படுத்தி வரும் புரோஹெல்த்கேர் கார்ப்ரேஷன் நிறுவனம் 98 கிளினிக்குகளை பட்டியலிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.
தடுப்பூசிகள் வீணாவதை தவிர்ப்பதற்காக முன் அளிப்பாணை அடிப்படையில் தடுப்பூசிகளைப் பெறும் திட்டத்தை இந்நிறுவனம் அமல்படுத்தியுள்ளதாக அது தெரிவித்தது.
தடுப்பூசி பெறுவதற்கு விண்ணப்பம் செய்தும் இன்னும் முன்பதிவு தேதி கிடைக்காதவர்கள், முதலாவது அல்லது இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெறுவதற்கான தேதியை தவறவிட்டவர்கள் இத்திட்டத்தில் இலக்காக கொள்ளப்படுவர்.
இத்தகைய தரப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளினிக்குகளில் பதிவு செய்து கொள்ளும்பட்சத்தில் தடுப்பூசி பெறுவதற்கான தேதி அவர்களுக்கு வழங்கப்படும்.