கோல சிலாங்கூர், அக் 14- சுங்கை சிலாங்கூர் முதல் கட்ட நீர் சுத்திகரிப்பு மையத்தில் புதிதாக மாற்றப்பட்ட வால்வுகள் 27 ஆண்டுகள் வரை தாங்கும் வல்லமை கொண்டவை என நம்பப்படுகிறது.
தற்போது பயன்பாட்டிலுள்ள நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அந்த உபகரணத்தின் தாங்கும் சக்தி மதிப்பிடப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
புதிய தொழில்நுட்பத்தைக் கொண்ட அந்த உபகரணம் நீண்ட காலத்திற்கு தாங்கும் சக்தியைக் கொண்டுள்ளது. குறைந்த பட்சம் 25 முதல் 27 ஆண்டுகள் வரை அக்கருவி ஆயுள்காலத்தைக் கொண்டிருக்கும் என கணிக்கப்படுகிறது என்றார் அவர்.
எனினும், எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்வதை தவிர்ப்பதற்காக கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்வது அவசியமாகும் என்று அவர் சொன்னார்.
முன்னதாக அவர், கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வரும் குழாய் வால்வுகளை மாற்றுவதை இந்த பராமரிப்பு பணி மையமாக கொண்டிருந்ததாக தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
சுமார் 27 ஆண்டுகள் கடந்த விட்ட நிலையில் அந்த வால்வுகளை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கான நீர் விநியோகம் எதிர்காலத்தில் சீராக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக இந்டவடிக்கை மேகொள்ளப்படுகிறது என்றார் அவர்.
இதனிடையே, அந்த நீர் சுத்திகரிப்பு மையத்தில் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நேற்று இரவு முடிவுக்கு வந்த நிலையில் நீர் விநியோகம் இன்று அதிகாலை கட்டங் கட்டமாக வழக்க நிலைக்குத் திரும்பத் தொடங்கியது.